Monday, August 23, 2021

நவரசா (Series Review)


 
வலைத்தொடர்: நவரசா
மொழி: தமிழ்
கிளைக் கதைகள்: 9
கால அளவு: 30-45 நிமிடங்கள் (ஒவ்வொரு கிளைக் கதையும்)
வெளியீடு: 6 ஆகஸ்ட் 2021
வலையமைப்பு: நெட்பிளிக்ஸ்




நவரசா வலைத்தொடர் – இதில் ஒன்பது கிளைக் கதைகள் அடக்கம். நவரசா என்ற பெயருக்கு ஏற்றவாறு ஒன்பது உணர்ச்சிகளை மையப்படுத்தி ஒன்பது தனித்துவமான கதைகளை பல்வேறு இயக்குநர்கள் மற்றும் பல கலை நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர்.  
ஜெயேந்திர பஞ்சபகேசனுடன் இணைந்து மணிரத்தினம் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் கியூப் சினிமா டெக்னாலஜிஸ் மூலமாக இத் தொடரைத் தயாரித்துள்ளார்.


1. எதிரி: (கருணா – Compassion)
விமர்சகர் மதிப்பீடு: 2.4/5



நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் பின் ஒரு பின்விளைவுகளும் அதற்கு ஏற்றாற் போல் நண்பனோ அல்லது எதிரியோ உருவாகத்தான் செய்கிறார்கள் என்ற கருத்தையும் பதிய வைக்கிறது இக்கதை. 
நம் உணர்ச்சிகளில் கருணையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை இது.

நடிகர்கள்: விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ரேவதி, அசோக் செல்வன் என அனைவரும் கணக்கச்சிதம். 

இயக்குநர் பிஜாய் நம்பியார் மற்றும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மேலும் இக்கதைக்கு வலு சேர்த்திருப்பார்கள். திரைக்கதையை இன்னும் வலுவாக அமைத்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது.


2. சம்மர் ஆப் '92: ( ஹஸ்யா - Laughter)
விமர்சகர் மதிப்பீடு: 2.1/5




சிறுவயதில் தோல்விகளை மட்டுமே சந்திக்க நேரிட்ட ஒருவனின் வாழ்க்கையில் பல வருடங்களுக்கு பின் வெற்றி பாதையில் செல்கையில் அவன் படித்த பள்ளிக்கூடத்திற்கே சிறப்பு விருந்தினராக வருவதையும், அதில் அவன் பகிரும் அவனின் வாழ்க்கை நிகழ்வுகளை நகைச்சுவை கொண்டு அமைத்துள்ளனர். 


நடிகர்கள்: யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு என அனைவரையும் நல்ல பொருத்தமாக கதாப்பாத்திரத்திற்கு ஏற்றாற் போல் இருந்தாலும் அவர்கள் நடிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே அமைந்துள்ளது. 


3.பிராஜெக்ட் அக்னி: (அற்புதா – Wonder)
விமர்சகர் மதிப்பீடு: 3.4/5


மனிதர்களின் அறிவிற்கு அப்பாற்பட்ட ரகசியங்கள் பல உண்டு. அதை புரிந்து கொள்ள முற்பட்ட விஞ்ஞானி சந்திக்க நேரிடும் பின்விளைவுகளே இக்கதை. 

நடிகர்கள்: அரவிந்த்சாமி, பிரசன்னா, சாய் சித்தார்த், பூர்ணா என எல்லோரும் போட்டியிட்டு கட்சிதமாக நடித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்திக் நரேன் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தியுள்ளார். மிகவும் நேர்த்தியான கதை என்றே கூற வேண்டும். 

4.பாயாசம் (பீபத்ஸா – Disgust) 
விமர்சகர் மதிப்பீடு: 2.3/5


சில நேரங்களில் நமக்கு நெருக்கமானவர்களிடமோ அல்லது பார்த்து சில நேரங்களே ஆன ஒருவரிடமோ அவர் வளர்ச்சியைப் பொறுக்க இயலாமல் ஏற்படும் வெறுப்பு எப்படியெல்லாம் ஒருவரை வழிநடத்தும் என்பதே இதன் கதைக்களம்.


நடிகர்கள்: அதிதி பாலன், ரோகிணி, டெல்லி கணேஷ் அனைவரும் கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளனர். 

ஏனோ கதை ஒரே இடத்திலேயே பயணிப்பது போல் அமைந்து சற்றே சலிப்பை ஏற்படுத்துகிறது. 

5.பீஸ் ( சாந்தி - Tranquility)
விமர்சகர் மதிப்பீடு: 2.3/5


வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் ஈழ தமிழர்கள் அமைதியாக வாழ்ந்திட மாட்டோமா என்ற ஏக்கத்துடன் போராடும் கதை.


நடிகர்கள்: பாபி சிம்ஹா , கௌதம் மேனன், மாஸ்டர் தருண், சனந்த் என எல்லா நடிகர்களையும் நன்கு தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

ஈழ மொழி முதல் அவர்கள் போராடும் இயல்பு வாழ்க்கை முறை வரை அனைத்தும் உண்மை நிகழ்வை பிரதிபலிப்பது போல் அமைந்தாலும் ஏதோ ஒன்று நம்மை இக்கதையிடம் ஈர்க்க தவறுகிறது.

6.ரௌத்திரம் (ரௌத்திரா – Anger) 
விமர்சகர் மதிப்பீடு: 2.8/5


அன்றாடம் வாழ்க்கை வாழ போராடும் சராசரி மனிதர்களுக்கும் ஆசைகள் உண்டு என்பதையும் அவரவர் ஆசைக்கு ஏற்ப வாழ நினைத்தாலும் இந்த சமுதாயம் அவர்களுக்கு தருகின்ற ஏற்க முடியாத வலியே ரௌத்திரமாக மாறிவிடும் என்பதை பிரதிபலிக்கிறது இக்கதை.

நம் உணர்ச்சிகளில் கோபத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை. 

நடிகர்கள்: ரித்விகா, ஸ்ரீ ராம், அபிநயஸ்ரீ, ரமேஷ் திலக், கீதா கைலாசம் என அனைவரின் நடிப்பும் உட்சகட்டம். 

இயக்குனர் அரவிந்த்சாமி கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தியுள்ளார்.

7.இன்மை (பயம் – Fear)
விமர்சகர் மதிப்பீடு: 3.4/5


நாம் தவறான ஒன்றை செய்கிறோம் என்று அறிந்தும் பேராசையின் காரணமாக அவற்றை செய்து முடித்த பின் என்றுமே நம்மை விடுபடாது ஒரு பயம் துரத்திக்கொண்டே இருக்கும் என்பதே கதைக்களம்.
மிகவும் நேர்த்தியாகவும் ரசிக்கும் வண்ணமாகவும் சற்றும் யூகிக்க முடியாத முறையில் அமைந்துள்ள கதையே மிகப்பெரிய வலுவாகும். 

நடிகர்கள்: சித்தார்த், பார்வதி, பாவெல் நவகீதன், ராஜேஷ் பாலச்சந்திரன், அம்மு அபிராமி என்று ஒவ்வொருவரும் போட்டியிட்டு நடித்திருப்பார்கள்.

இயக்குனர் ரதிந்திரன் ஆர். பிரசாத் - இன் இயக்கம் மிகவும் பாராட்டுக்குரியது.

8.துணிந்தபின் (வீரா – Valour)
விமர்சகர் மதிப்பீடு: 2.4/5


வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் நாம் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் பொழுது நாம் இதுவரை கண்டிராத நமக்குள்ளே புதைந்துள்ள துணிச்சலை வெளிக்கொண்டு வர தருணம் தூண்டும் என்பதே கதைக்களம்.

நடிகர்கள்: அதர்வா, அஞ்சலி, கிஷோர் என அனைவரும் நல்ல தேர்வு.

இயக்குனர் சர்ஜுன் கதை நிகழும் இடங்களை நன்கு தேர்வு செய்து இருந்தாலும் ஏனோ இக்கதை நமக்கு வீரத்தை நன்கு பதிய வைத்திட தவறுகிறது.

9.கிட்டார் கம்பி மேலே நின்று (ஸ்ரீங்கரா – Romance)
விமர்சகர் மதிப்பீடு: 2.2/5



முதல் சந்திப்பிலேயே நம்மையும் மீறி ஒருவரிடம் ஈர்க்கப்படும் உணர்வை பிரதிபலிக்க முற்படுவதே இக்கதை. 

நடிகர்கள்: சூர்யா, பிரயாக மார்டின் என நல்ல தேர்வாக இருந்தாலும் இயக்குனர் கௌதம் மேனனின் வாரணம் ஆயிரம் திரைப்படத்தையும் இயக்குனர் மணிரத்னத்தின் ஓகே கண்மணி திரைப்படத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கியது போன்ற தோற்றம் உள்ளதால் இக்கதை நம்மை ஈர்க்க தவறுகிறது.

இசையமைப்பாளர் கார்த்திக் நன்கு ரசிக்கும் வண்ணம் இசையமைத்து பாடி இருப்பார். இக்கதை காதல் உணர்வை வெளிப்படுத்துவதை தவறவிட்டு ஏனோ நல்ல பாடல்களின் தொகுப்பாக மட்டும் திகழ்கிறது. 

No comments:

Post a Comment

If you have any doubts, please let me know.