மொழி: தமிழ்
கால அளவு: 129 நிமிடங்கள்
வெளியீடு: 16 அக்டோபர் 2020
விமர்சகர் மதிப்பீடு: 3.5/5
புத்தம் புது காலை திரைப்படம் - ஐந்து குறும்படங்கள் உள்ளடங்கிய படம். வெவ்வேறு நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் பல்வேறு கலை நிபுணர்களால் கோவிட்– 19 ஊரடங்கு காலகட்டத்தில் 21 நாட்கள் ஊரடங்கை பின்னணியாய் கொண்டு இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்கள்.
நடிகர் மாதவனின் குரல் வழி காதலைப் பற்றி அழகாய் விவரிப்பதில் தொடங்குகிறது இக்கதை.
1.இளமை இதோ இதோ
“காதலில் பல பரிணாமங்கள் உண்டு. இதில் சரி தவறெல்லாம் அவரவர் பார்க்கும் பார்வையிலே”.
ஜெயராமின் துருதுரு நடிப்பால் நம்மைக் கவர்ந்து இழுக்கையிலே, அவரது இளமை தோற்றத்திற்காக நடிக்கும் அவரது மகன் காளிதாஸ் ஒரு படி மேல் சென்று நடிப்பினில் கலக்கியிருக்கிறார். ஊர்வசி – இன் யதார்த்தமான அளவான நடிப்பை அவரது இளமை தோற்றத்திற்காக நடித்த கல்யாணி அனைவரும் மெச்சும் வண்ணம் நடிப்பினில் ஈடு செய்துள்ளார்.
இவர்களின் காதலை நியாயப்படுத்திட முயற்ச்சிக்காமல் அவற்றினை எல்லோராலும் இயல்பாய் ரசிக்கும்படி இயக்குநர் சுதா கொங்கரா அமைத்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் – இன் இசை மெல்லிய காற்றைப் போல் நம்மை அழகாய் வருடிச் செல்கிறது.
2.அவரும் நானும் – அவளும் நானும்
“சில உறவுகளைத் தள்ளி நின்று பார்த்தே தவறாய் மதிப்பிட்டிருக்கிறோம். ஆனால், அவர்களுடன் சேர்ந்து பயணிக்கும் நேரம் வரும்பொழுதுதான் புலப்படுகிறது அவர்களுடைய உண்மையான அன்பின் பக்கங்கள் யாவும்”.
ஓய்வு பெற்ற விஞ்ஞானியாகவும், மகள் மேல் உள்ள அளவு கடந்த அன்பை உணர்ச்சிவசமாக பேத்தியிடம் (ரிது வர்மா) வெளிப்படுத்தும் எதார்த்தமான தாத்தாவாகவும் எம்.எஸ்.பாஸ்கர் . அவரது நடிப்பினால் அனைவரையும் கவர்ந்து கதைக்குள் இழுத்துள்ளார். ரிது வர்மாவின் நடிப்பும் பாராட்டிட வேண்டியது.
நேசித்தவர்களை நம்மிடமிருந்து தள்ளி வைத்துக் காயப்படுத்தினாலும், உண்மையான அன்பிற்காக என்றுமே அந்த மனம் ஏங்கிக் கொண்டுதான் இருக்கிறது என்பதை மிகவும் ஆழமாக மனதை நெருடும்படி அமைத்திருக்கிறார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். இக்கதைக்கு கோவிந்த் வசந்தா இசை கனக்கச்சிதம்.
3.காஃபி, எனிவன்? (Coffee, anyone?)
“கால ஓட்டத்தில் வேலைக்கு முக்கியத்துவம் தந்து நமக்கு நெருக்கமான உறவுகள் உடனும் நேருக்கு நேர் பேசிப் பழகுவதை மறந்து வருகின்றோம். ஏனோ, அவர்களை நிரந்தரமாக பிரிய நேரிடுமோ என்ற அச்சம் எழும் பொழுதுதான் புரிகிறது நம் வாழ்க்கையில் தவறவிட்டவை அனைத்தும்”.
சகோதரிகளாக அனு ஹாசன், சுஹாசினி மற்றும் ஸ்ருதி ஹாசன் கதாபாத்திரங்களுக்கு நன்கு பொருந்தி உள்ளனர். இவர்களது தந்தையாக காத்தாடி ராமமூர்த்தி மற்றும் தாயாக கோமலம் சாருஹாசன் நடிப்பினால் எதார்த்தமான தம்பதியினர் ஆக பதிய வைத்திருப்பார்கள். கோமாவில் இருக்கும் தாயாரை மீட்டெடுத்திட முயல்வதே இக்கதை.
“அதிசயம் நிகழுமா என்று வினவுவோரை விட முழு அன்பினால் மன உறுதிக் கொண்டு நாம் நேசிப்பவர்களுக்கு அந்த அதிசயத்தை நிகழ்த்தியே தீருவேன் என்று அடம்பிடிக்கும் உள்ளங்களுக்கு அதிசயங்கள் நிகழத்தான் செய்கிறது” என்பதை மிகவும் அழகாக பதிய வைத்திருக்கிறார் இயக்குநர் சுஹாசினி மணிரத்தினம்.
4.ரீயூனியன் ( Reunion)
“பள்ளிக்காலத்தில் நண்பர்களாக, நேசித்தவர்களாக நாம் பழகியவர்களைக் கால ஓட்டத்தில் மறந்தே சென்றிருப்போம். ஆனால், அவர்களை மீண்டும் நமது பாதையினில் கடக்க நேரிட்டால், நாம் பெயரிட தவறிய அந்த உறவுடன் பயணிக்க நேர்ந்து பெயரிட வாய்ப்பும் அமைந்தால் - என்ன நேருமோ?”.
போதைப்பொருள் அடிமையாக தனது நடிப்பினால் மிரள வைத்திருக்கிறார் ஆண்ட்ரியா. அவரது நண்பனாக குருச்சந்திரன் – தாயாக லீலா சாம்சன். நண்பன் மற்றும் அவரது தாயாரின் அன்பும் ஒருசேர கிடைத்து, அந்த போதைப்பொருளின் பிடியிலிருந்து வெளிவர முயல்கிறார், ஆண்ட்ரியா.
அன்பு ஒன்றே எல்லா தீமையையும் தகர்த்தெறியும் வலிமை கொண்டது என்பதை மிகவும் மென்மையாக தனக்கே உரிய பாணியில் அமைத்திருக்கிறார் இயக்குனர் ராஜீவ்மேனன்.
5.மிராகில் (Miracle)
“ஆசைகளும், பேராசைகளும் நிறைந்ததே இந்த வாழ்க்கை. சிலருக்கு அவர்களின் நியாயமான ஆசை கூட நிகழ்வதில்லை. வாழ்க்கையில் கிடைப்பதிலேயே திருப்தி கொண்டு வாழ்கின்றனர். ஆனால், சிலருக்கோ அவர்களின் பேராசைகள் கூட விந்தையாக நிகழ்கிறது”.
பாபி சிம்ஹா நடிப்பினால் நம்மை விரைவில் கதைக்குள் அழைத்துச் செல்கிறார். அனைவரும் சீக்கிரமாக பணம் சம்பாதிப்பதற்கு ஆசைப்படுகின்றனர்; அவ்வளவு ஏன், பேராசை கூடப் படுகின்றனர்.
இந்த கதையில் இரு திருடர்களும், சொந்தப் படத்தைத் தயாரித்திட ஆசைப்படும் தயாரிப்பாளரும், ஆன்மீக ஆலோசகராக பணம் சம்பாதிக்கும் பாபா ஆகியோரில் எவர் விதியில் ஆசை - பேராசை எவ்வாறெல்லாம் விளையாடி செல்கிறது என்பதை ரசிக்கும் வண்ணம் அமைத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.
அனைத்து கதைகளையும் கச்சிதமாக, மிகவும் அழகாக, ஆழமாக அமைத்து இன்னும் கொஞ்சம் வேண்டுமென்ற ஏக்கத்தை தந்து செல்கிறது இப்படம்.
நல்ல கருத்துக்கள் உடைய கதைக்களங்களை மையமாக கொண்ட திரைப்படங்களை ரசிப்போருக்கு இப்படத்தைப் பரிந்துரைக்கிறேன்.
You Can Watch This Movie In Amazon Prime :







No comments:
Post a Comment
If you have any doubts, please let me know.